"வரலாற்று பாடம் வெறுக்கத்தக்க பாடமல்ல
என்பதை இளைய தலைமுறைக்கு எடுத்து கூறவே இந்த கண்காட்சியை நடத்துகிறோம்"
என்று நாணயக் கண்காட்சி நடத்தும் "பயிற்று" அமைப்பின் நிர்வாகிகள் கூறினர்.
தங்க நாணயங்கள் "பயிற்று" அமைப்பின் சார்பில் கி.மு. 3ம்
நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த
நாணயங்களின் இரண்டு நாள் கண்காட்சி மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திரசேகரன்
திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் 360க்கும் மேற்பட்ட நாணயங்கள்
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காட்சியில் தங்கம், வெள்ளி, செப்பு
நாணயங்கள் உள்ளன.
சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், நாயக்கர், மராட்டியர்,
நவாப்புகள், ஆங்கிலேயர் போன்ற அனைவரின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட
நாணயங்கள் குறித்து விளக்க தனித்தனி ஆர்வலர்கள் உள்ளனர்.
இதுகுறித்து, "பயிற்று" அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:
"நமது கல்வி முறையில் மற்ற பாடங்களை தெரிந்து கொள்வதற்கான கருவிகள் உள்ளன.
ஆனால் வரலாற்றை எளிதில் புரிந்து கொள்வதற்கான கருவி இல்லை. இந்த பிரச்னையை
போக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் அருங்காட்சியகத்துக்கும், தொல்லியல்
துறைக்கும் அழைத்துச் செல்ல உத்தரவிட்டாலும் நடைமுறையில் ஒரு சில கல்வி
நிறுவனங்களே அதை கடைப்பிடிக்கின்றன.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரலாற்றின்
மேல், ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நாணயக் கண்காட்சியை துவக்கி
உள்ளோம். இதில், மாணவர்கள் சுவாரசியமாக தகவல்களை கேட்கின்றனர். குறிப்பாக
நம் முன்னோர்களின் படை, வணிகம், வீரம், செழுமை போன்றவற்றை அறிவதில் ஆர்வம்
செலுத்துகின்றனர்.
ராஜராஜ சோழன் காலத்தில் இலங்கை நமது ஆளுகையின் கீழ்
இருந்தது. அதனால், அந்த நாட்டு மன்னர்கள் ராஜராஜ சோழ சோழன் கொடி பொறித்த
நாணயங்கள் வெளியிடப்பட்டன. அதேபோல், நம் நாட்டுக்கு இலங்கை அரசு கப்பம்
கட்டியதை விளக்கும் நாணயங்களும் வெளியிடப்பட்டன. அதை மாணவர்கள் ஆர்வத்துடன்
அறிந்து கொள்வதில் முனைப்பு காட்டுகின்றனர்.
இழந்த வரலாற்றை மீட்டெடுப்பதற்கும் வரலாற்று அறிவு தேவை.
எனவே, வரலாற்று பாடம் வெறுக்கத்தக்க பாடமல்ல என்பதை இளைய தலைமுறைக்கு
எடுத்து கூறவே இந்த கண்காட்சியை நடத்துகிறோம்." இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment